மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 40 வயது பெண்ணான சரஸ்வதி பனிசால் என்பவர் பயணம் செய்தார். ஏசி கோச்சில் தனக்கு ஒதுக்கப்பட்ட மேல் படுக்கையை அவர் பயன்படுத்தி இருக்கிறார். பெங்களூருவை நெருங்கியதும் மேல் படுக்கையில் இருந்து இறங்க அவர் முயற்சி செய்துள்ளார். அப்போது கால் தடுக்கி தவறி விழுந்தார் இதனால் அவருக்கு பலமாக அடிபட்டதுஉடனடியாக அந்த பெண்மணி அடிபட்டது குறித்து ஒருவர் ரயில்வேத்துறைக்கு ட்விட்டரில் தகவல் தெரிவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம் மருத்துவக்குழுவை தயார் செய்துள்ளது. ரயில் வந்ததும் சரஸ்வதிக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பின் மேற்கொண்ட சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்த சரஸ்வதி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பேசிய மருத்துவர் ஸ்நேகலதா, ”ரயில் வருவதற்கு முன்னதாக நாங்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தோம். ரயில் வந்ததும் சரஸ்வதிக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவாக சரஸ்வதி பதில் அளித்தார். பின்னர் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.அப்போது கூட உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு காவலர்களிடம் சரஸ்வதி தெரிவித்தார். ஆனால் கொஞ்ச நேரத்தில் அவர் பேச்சு தடுமாறி நினைவிழக்கத் தொடங்கினார். மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தலையில் பலமாக அடிபட்டு உள்காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்