திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற சித்திரை தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதே போல இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தோளுக்கினியானில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 4.15 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைதார். பின்னர் 5 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
திருத்தேர் ஸ்ரீரங்கம் சித்திரை வீதிகள் வழியாக வலம் வந்தது. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து இருந்தார்.


