சந்திரயான்-2 தோல்வியால் சூரியனை ஆராயும் ‘ஆதித்யா’ செயற்கைக்கோளின் பணிகள் தாமதமாகியுள்ளதாக, இஸ்ரோ முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை கொட்டிவாக்கத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மின்கலனால் செயல்படும் இருசக்கர பசுமை வாகன விற்பனை மையத்தை நேற்று (பிப்.23) மயில்சாமி அண்ணாதுரை தொடக்கி வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரிய ஒளியினால் நவீன லித்தியம் அயன் பேட்டரி தொழில்நுட்பத்தை இஸ்ரோ 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகவும்,
சுற்றுச்சூழலை பாதுகாத்திட அதிகளவில் பசுமை வாகனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆதித்யா செயற்கைக்கோள், சந்திராயன் 3 என புதிய திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்தி வருவதாகவும், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
மேலும், “பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஈர்ப்பு விசை எந்த இடத்தில் பூஜ்ஜியமாக உள்ளதோ, அந்த இடத்தை சுற்றுவதுதான் ‘ஆதித்யா’ செயற்கைக்கோள். அதன் பணிகள், 2 வருடங்களுக்குள் நிறைவடையும். அந்த செயற்கைக்கோள் சூரியன் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும். சந்திரயான்-2 மூலம் ஏற்பட்ட சிறு சறுக்கலால் இதன் பணிகள் சில தடைபடுகின்றன.
இருந்தாலும், ‘ஆதித்யா’வுக்கான பணிகள் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன” என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.