தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,937ஆக உயர்ந்துள்ளது; சென்னையில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 570ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று ஒரே நாளில் 81 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளதாகவும், சென்னையில் 34, கோவையில் 26, சிவகங்கையில் 10, திருவாரூரில் 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் படி…
தமிழகத்தில் திங்கள் கிழமை இன்று மேலும் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 33 ஆண்கள் மற்றும் 19 பெண்கள். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1937 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. எனவே மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 24 ஆக உள்ளது.
இன்று மட்டும் 81 பேர் முழுவதும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர் எண்ணிக்கை 1101 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 809 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் 1.2 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 56.8 சதவீதமாகவும் உள்ளது. தமிழகத்தில், தற்போது 29,797 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 36 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.
இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 52 பேரும் சென்னை, மதுரை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே. மற்ற மாவட்டங்களில் இன்று புதிய தொற்று இல்லை. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு தொற்றும் ஒரு வயது குழந்தை!