மதுரையில் அரசு உத்தரவை ரேசன் கடை பணியாளர்கள் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேமாத ரேசன் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ரேசன் கடை முன்பாக குவிய வேண்டாம் என அரசு உத்தரவிட்டது. ஆனால் மதுரை நகரில் மேலமடை, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரேசன் கடையின் சார்பாக பொருட்கள் வாங்க நேரடியாக டோக்கன் வழங்காமல், குடும்ப அட்டைதாரர்களை ரேசன் கடையின் விற்பனையாளர்கள் கடைக்கு அழைத்து வழங்கி வருகின்றனர்.
மதுரை மேலமடை மாநகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ரேசன் கடையில் சனிக்கிழமை கடைக்கு வந்தவர்களுக்கு பொருட்கள் வாங்க டோக்கன் வழங்கினர். இன்று டோக்கன் பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு வியாழக்கிழமை குடிமை பொருட்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகவே, மதுரை மாவட்ட நிர்வாகம், குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்றே பொருட்களை பெற டோக்கன் வழங்க இப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பாக, மதுரை மண்டல கொரோனா நோய் தடுப்பு சிறப்பு அலுவலர் சி.காமராஜ் தெரிவித்தபோது, கண்டிப்பாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறேன் என்றார்.
மதுரையில் குடும்ப அட்டை இல்லாதோருக்கு, தாலுகா அலுவலகத்தில் இருந்தே வீடு தேடி வந்து பொருள் உதவி அளிக்க நிர்வாகம் ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்தது.
குடும்ப அட்டை இல்லாதவர்கள் 1070 மற்றும் 1077 என்ற ஹெல்ப் லைன் help line எண்ணுக்கு தொடர்பு கொண்டால் வீடு தேடி வந்து வட்ட வழங்கல் -தாலுகா அலுவலகம் மூலம் அரசு பொருள் உதவி செய்வதாகக் கூறப் பட்டிருந்தது.
- செய்தியாளர்: ரவிசந்திரன், மதுரை