
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11,760 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பு சென்னையில் 7,000ஐ தாண்டியுள்ளது! சென்னையில் இன்று கொரோனாவால் 363 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,114 ஆக உயர்ந்துள்ளது!
தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 81 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் இன்று 536 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மட்டும் 46 பேர். இன்றைய பாதிப்பில் 304 ஆண்களும், 232 பெண்களும் உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 234 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதை அடுத்து, மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் விகிதமும் 37.46 ஆக உள்ளது.
இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் 0.68 ஆக உள்ளது. தற்போது 7,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியாவிலேயே குறைந்த அளவிலான இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் உள்ளது. கொரோனா பரிசோதனைகளை குறைக்கவில்லை. ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இதுவரை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 3,22,508 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி யாரும் விடுபடாமல் சோதனை செய்யப்படுகிறது. சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் பதற்றமடையவோ பயமடையவோ வேண்டாம்; கொரோனாவை எதிர்கொள்வதே முக்கியம் என்று கூறினார் விஜயபாஸ்கர்.
சுகாதாரத்துறை வெளியிட அறிக்கையின் படி, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையே அதிகபட்ச பாதிப்பில் உள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப் பட்ட 536 பேரில் சென்னையில் மட்டும் 364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து சென்னையில் மொத்த பாதிப்பு 7,117 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 43 பேர், திருவள்ளூரில் 19 பேர், காஞ்சிபுரத்தில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவ்வகையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் காஞ்சிபுரம் என சென்னையை ஒட்டிய வட மாவட்டங்களே பெருமளவு பாதிப்பைக் கொண்டிருக்கின்றன.

