மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக.,வைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ விசாரணை செய்த போது ஜெயலலிதாவின் சகோதரர் மகள் தீபா , மகன் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தாங்கள் வாரிசுகள் என்று கூறி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வருமான வரி பாக்கி உள்ளதா என்பதை அறிய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை பிரிவும் வழக்கில் சேர்க்கப்பட்டு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. வருமான வரி செலுத்த வேண்டியுள்ளதால், ஜெயலலிதாவின் சொத்துகள் சிலவற்றை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை பதில் அளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப் பட்டது.
ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றலாம். ஒரு பகுதியை மட்டும் நினைவில்லமாக மாற்றலாம். மக்கள் பணத்தில் தனிநபர் சொத்துகளை வாங்கினால், அதற்கு முடிவே இல்லாமல் சென்று கொண்டே இருக்கும். இதனால், வேதா நிலையத்தை முழுமையாக நினைவில்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்யவேண்டும்.
ஜெயலலிதாவின் சொத்துகள் மீது தீபா, தீபக், இரண்டாம் நிலை வாரிசுகள். அவர்களுக்கு சொத்தில் உரிமை உண்டு. ஜெயலலிதாவின் சொத்துகளின் ஒரு பகுதியை அறக்கட்டளையைக் கொண்டு நிர்வகிக்கலாம். இந்தப் பரிந்துரை குறித்து, எட்டு வாரங்களில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்! புகழேந்தி, ஜானகிராமன் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது.
- போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
- ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது?சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி.
- தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
- ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.
- ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைக்க வேண்டும்.
- 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.