
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சம்பன்குளம் கிராமத்தில் அங்குள்ள நாடார் சமுதாய மக்கள் வணங்கி வழிபட்டுக் கொண்டிருந்த மாடன் கோயில், இசுலாமிய இயக்கத்தவர்கள் சிலரால் பொய்யான புகார் அளிக்கப் பட்டு, போலீசார் முன்னிலையில் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடிக்கப் பட்ட சம்பவத்தைக் கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளன.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள் கொண்ட, விஷ்வ ஹிந்து பரிஷத் குமரி விபாக் செயலர் எஸ்.சுப்பையா, இது குறித்து தெரிவித்தவை….
அண்மைக் காலமாக தமிழகத்தில் ஹிந்துக்களின் புனிதத் தலங்களான கோவில்களை இடித்து, இந்துக்கள் வழிபாடு நடத்த விடாமல் செய்யும் சதி நடைபெற்று வருகிறது. மதவாதிகள் சிலருடன் சேர்ந்து கொண்டு, அரசியல்வாதிகள் அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென கோவில்களை புல்டோசர் ஜேசிபி ஆகியவற்றை தயாராக கொண்டு சென்று இடித்து வருகிறார்கள்!
அண்மையில் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய பகுதி அழகப்பபுரம், சம்பங்குளம் இரண்டு ஊர்களில் கோவில்கள் இடிக்கப்பட்டன. இதனால் இந்துக்கள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர். இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல 13.6.2020 சனிக்கிழமை தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஏதாவது ஓர் இடத்தில் வைத்து மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதை மனதில் கொண்டு ஆர்ப்பாட்டத்தை எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்தி விடாமல், அரசின் விதிகளுக்கு உட்பட்டு, சமூக இடைவெளி விட்டு, கோஷமிட்டு, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
எழுப்பப்பட வேண்டிய கோஷங்கள்:
- இடிக்காதே… இடிக்காதே… எங்கள் முன்னோர்கள் வழிபாடு செய்த, நாங்கள் வழிபடும் கோயில்களை இடிக்காதே
- ஆழ்வார்குறிச்சி பகுதியில் முன்னறிவிப்பு செய்யாமல் கோவிலை இடிக்க உறுதுணையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடு
- உயர் அதிகாரிகளுக்கு உரிய மனு நகலை கொடுக்கச் சென்று, காவல் நிலையத்தில் வெளியில் நின்றவர்கள் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யக் காரணமான கடையம் காவல் ஆய்வாளர் திருமதி ஆதிலட்சுமி மீது தக்க விசாரணை நடத்தி நடவடிக்கை எடு
- இடித்த கோயில்களைக் கட்டிக் கொடு!
- என்று தெரிவித்துள்ளார் சுப்பையா.
மேலும், அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் குறிப்பிட்டபோது, நெல்லை மாவட்டம் பழவூர் கிராமம் பகுதி இரண்டில் அம்பலவாணபுரம் சர்வே எண் 1569 ஐ கிரையம் வாங்கியவர் சர்வே எண் 1908/2 ல் உள்ள கோவிலில் வழிபட விடாமல் தடுத்து, காம்பவுண்டு சுவர் கட்டினார்.
அதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது ஆக்கிரமிப்பை எடுக்க ராதாபுரம் வட்டாட்சியர் உத்தரவிட்டும், எடுக்கவில்லை என்றால் இடித்து, அந்த செலவுத் தொகையை வசூல் செய்வோம் என ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தும், அவரை நீதிமன்றம் செல்லக் கூறி அந்த மனு மீது ராதாபுரம் வட்டாட்சியர் பதில் கொடுக்காமல் ஆக்கிரமிப்பாளர் தடை ஆணை பெற வட்டாட்சியர் அலுவலகமே ஆதரவாக இருந்து வருகிறது.
இதன் காரணத்தால், அங்கே நான்கு ஆண்டுகளுக்கு மேல் திருவிழா நடத்தப் படாமல் உள்ளது… என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.


