கோவில்பட்டியில் தம்பதி உட்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் திண்டுக்கல்லில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்தார். உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் உரிய அனுமதியுடன் ஆம்புலன்ஸில் கோவில்பட்டிக்கு கொண்டுவரப்பட்டது. ஆம்புலன்ஸில் இளைஞரின் பெற்றோர் மற்றும் மனைவி, ஒரு வயது குழந்தை ஆகியோர் இருந்தனர்.
அவரது உடலுக்கு அதிகாரிகள் முன்னிலையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. மேலும், அவரது பெற்றோர் மற்றும் மனைவி, 3 வயது குழந்தை ஆகியோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
அவர்களுக்கு நடத்தப்பட்ட சளி மாதிரி பரிசோதனையில் அந்த இளைஞரின் தாய் தந்தை மற்றும் மனைவிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேர், 3 வயது குழந்தை ஆகிய 4 பேரும் கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.