தென்மேற்கு பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கேரளம், கர்நாடகம், லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரியில் மிதமான மழைக்கும், நெல்லை, தூத்துக்குடியில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில்…
தென்மேற்கு பருவக் காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவலா ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாலைப் பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக் கூடும்
கேரளா, கர்நாடகா கடற்கரை பகுதிகள், இலட்சத்தீவு பகுதியில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் அங்கு 2 நாட்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.