➤ யாரையும் கட்டாயப்படுத்துவதற்கு அல்ல, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தவே ஊரடங்கு.
➤ கொரோனா புதிய நோயாக இருப்பதால் உலகளவில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
➤ கொரோனா நோய் எப்போது குறையும் என்பது கடவுளுக்குதான் தெரியும்.
➤ வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் மூலமே கொரோனா தொற்று பரவியது; தமிழகத்தில் கொரோனாவை தடுக்க அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது.
”யாரையும் கட்டாயப்படுத்துவது அல்ல புவனாவை கட்டுப்படுத்துவதற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது ‘ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை பார்வையிட்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் கூறியதாவது…
கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் தொடக்கத்தில் கொரோனா பரவியது.
விபத்து ஏற்படுவதை தடுப்பதுபோல் கொரோனாவை தடுக்கும் ஸ்பீடு பிரேக் தான் ஊரடங்கு. கொரோனாவை தடுக்கவே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களை சிரமப் படுத்துவதற்கு அல்ல. கொரோனாவை கட்டுப்படுத்த தான்.
டாக்டர்கள், நர்சுகள் பணியால் தான் குணமடைபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்தால், நோய் பரவலை குறைக்கலாம். கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.
சென்னையில் ஏன் முழு ஊரடங்கு என சில கட்சித் தலைவர்கள் கேட்கின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவல் முயற்சிக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
நாட்டிலேயே அதிகபட்சமாக 8.27 லட்சம் பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 83 பரிசோதனை மையங்கள் உள்ளன. தினமும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தனக்கு, கொரோனா இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மறுத்துள்ளார்.
கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும். மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை அதிகப்படுத்த வேண்டும்.
சென்னையில் இருந்து வெளியே செல்பவர்களால் தான் பிற மாவட்டங்களில் கொரோனா பரவுகிறது. வெளியூர் செல்லாமல், சென்னை மக்கள் இங்கேயே தங்கியிருந்தால் தான் பரிசோதனை செய்ய முடியும்… என்றார் அவர்.