புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வழியாக காரில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமாருக்கு தகவல் கொடுத்தனர்.
எஸ்.பி உத்தரவின் பேரில், புதுக்கோட்டை முழுவதும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்தான், புதுக்கோட்டை லேனா மண்டபம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை நகர் போலீஸார் அந்த வழியாக அதிவேகமாகச் சென்ற சைலோ காரினை மடக்கிப்பிடித்தனர்.
அப்போது காரில் இருந்து இறங்கிய 3 பேர் தலைதெறிக்க ஓடினர். இதையடுத்து காரை போலீஸார் தீவிரமாகச் சோதனை செய்தனர். கார் முழுவதும் பண்டல், பண்டல்களாகச் சுமார் 20 அட்டைப்பெட்டிகளில் போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
3 பேர் தப்பித்து ஓடிய நிலையில் காரில் இருந்த மணமேல்குடியைச் சேர்ந்த நைனார் முகமது, இலுப்பூரைச் சேர்ந்த சத்யராஜ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த சைலோ கார் மற்றும் போதைப் பொருள் பண்டல்களையும் பறிமுதல் செய்தனர். கடந்த சில தினங்களாகவே மாமல்லபுரம், கடலூர் போன்ற கடற்கரைப் பகுதிகளிலிருந்து போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அது ஹெராயின் வகையைச் சேர்ந்த மெத்தாம்பிடைமின் என்ற வகையான போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இந்த நிலையில்தான் அதே வகையான போதைப்பொருட்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது.