தமிழகத்தில்… ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க ஆட்சியர் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியர்கள், தங்களது மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்கும் முடிவுகளை எடுக்க அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனையை இன்று காலை நடத்தியுள்ள நிலையில் வரும் நாட்களில் ஊரடங்கு தளர்வுகளை மேலும் கடுமையாக்க முடிவு செய்துள்ளனராம்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். அதில் ஊரடங்கு, கொரோனா பரவல் நிலவரம், மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தெல்லாம் தெரிவிப்பார் என்று கூறப் படுகிறது.
இதனிடையே, திருச்சியில் முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன், பத்திரிகையாளர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
திருச்சியில் அரசு விழாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி புதன்கிழமை வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் போட்டோகிராபர்களுக்கு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
- ரவிச்சந்திரன்,