நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா, முரசொலி பவள விழா, மாற்றுக்கட்சியினர் கழகத்தில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் ஆர்,கே.நகரில் இன்று நடைபெற்றது. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஆர்.கே.காளிதாசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, டாக்டர் பூங்கோதை ஆலடிஅருணா, மைதீன்கான், கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட செயலாளர் எம்.அப்துல்வகாப், எம்.எல்.ஏ.லெட்சுமணன் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது
தமிழகத்தில் விரைவில் ஒரு மாற்றம் ஏற்பட போகிறது. நாம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும் எதிர்பார்க்கிற திமுக ஆட்சி ஏற்பட போகிறது. எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல. ஆட்சி என்பதை மக்களுக்கு தொண்டாற்றும் கருவியாகவே கருதுவோர் நாங்கள். வெற்றி,தோல்வி என்பது மாறி மாறி வரும். வெற்றி வரும் நேரத்தில் வெறி கொண்டு ஆடுவதும், தோல்வியை கண்டு துவண்டு போகிறவர்கள் நாங்கள் அல்ல.
நியாயமாக சில கட்சியில் இருந்து விலகுவர்கள் ஆட்சியில் இருக்க கூடிய கட்சிக்கு தான் செல்வர். ஆனால் திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட சாரை சாரையாக வந்து சேருகின்றனர். திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காக அல்ல ஒட்டு மொத்த தமிழகத்தை காக்க வேண்டும் என்பதற்காக தான். சாதாரண பேரூராக உள்ள பாவூர்சத்திரத்தில் இது போன்ற கூட்டம் கூடியிருப்பதே திமுக செல்வாக்கு மக்களிடத்தில் உயர்ந்து கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.திமுக 6 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை. ஏதிர்கட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சியில் இருப்பதாகவே மக்கள் நினைகின்றனர்
.தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்ற வில்லை. குறிப்பாக பூரண மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வருவோம் என்றனர். ஆனால் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று நடைபெறுவது ஆட்சி அல்ல வெறும் காட்சியே. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தினால் எவ்வித பாதிப்பும் வராது என்றனர். ஆனால் இன்று சீனி 13.50 ல் இருந்து ரு.25 ஆக உயர்ந்து போய் விட்டது. உளுந்தம் பருப்பு இல்லை என அறிவிப்பு வந்து கொண்டிருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் ரேசனில் அரிசி இல்லை என்றும் அறிவிக்கலாம். ஏன் ரேசன் கடையே இல்லை என்று கூட அறிவிப்பு வரலாம். இதை கண்டித்து வரும் 22ம்தேதி திமுகசார்பில் ரேசன் கடை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் கொண்டாடுகிறார். மக்கள் பணத்தை செலவழித்து கொண்டாடும் விழாவில் மக்களுக்காக அரசு திட்டங்களை சொல்லுங்கள். எம்.ஜி.ஆர். புகழ் கூட பாடுங்கள். ஆனால் திமுகவை விமர்ச்சிக்க பயன்படுத்தாதீர்கள்.
நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதல்வர், துணை முதல்வர் கூறுகின்றனர். அதே நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதே. இது தான் குதிரை பேர ஆட்சியின் லட்சணம். மைனாரிட்டி ஆட்சி நடத்தியதாக திமுகவை கூறும் முதல்வர், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மைமை நிரூபிக்க தயாரா?
தலைமை செயலராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்தில் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை,கரூர் அன்புநாதன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி, சேகர்ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளை தொடர்ந்து, சசிகலா உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தியதுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிலும் நடத்தினார்களே. அது என்னவாயிற்று சோதனை நடத்தியதன் நோக்கமே மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்பதே. ஆனால் உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ. அரசு செயல்படுமானால் தமிழகத்தில் கால் மட்டும் அல்ல கை கூட ஊன்ற முடியாது.
தமிழகத்தில் நடைபெறும் குதிரை பேர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழ்நிலை விரைவில் வந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.


