அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசன விழாவில், ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத நடராஜர் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பாடு கண்டருளினார்.
முன்னதாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உத்ஸவர் நடராஜர், சிவகாமசுந்தரி வீதியுலாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆருத்ரா தரிசனத்தன்று மாடவீதியில் வலம் வர திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. மேலும், வீதிஉலாவின் போது சுவாமி முன்பு பக்தர் தேங்காய் உடைக்க அனுமதி இல்லை என்று, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
இதை அடுத்து, இன்று அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் மாடவீதி வழியாக உற்சவர் வீதி உலாவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டது.
கொரோனா காலம் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில் தேரோட்டம் உட்பட உற்சவர்கள் மாடவீதி உலாவர தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்போது, கோயிலுக்குள் ஐந்தாம் பிராகாரத்தில் விழா நடைபெற்றது.
இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா இன்று 30 ம் தேதி நடைபெற்று வருகிறது. இதில், மாட வீதி வழியாக வீதி உலாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
அதே நேரம், திருவண்ணாமலையில் இந்த மாதம் பௌர்ணமி கிரிவலம் வர 29 மற்றும் 30 தேதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
- செய்தி: எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை