spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்போக்குவரத்து ஊழியர்களை மிரட்டாதீர்; பேச்சு நடத்தி தீர்வு காண்பீர்: ராமதாஸ்

போக்குவரத்து ஊழியர்களை மிரட்டாதீர்; பேச்சு நடத்தி தீர்வு காண்பீர்: ராமதாஸ்

- Advertisement -

போக்குவரத்து ஊழியர்களை மிரட்டாதீர்கள், பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணுங்கள் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நான்காவது நாளாக இன்றும் இயக்கப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு, அதை செய்யாமல் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேலும் சிக்கலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

அரசுப் போக்குவரத்துக்கழக வேலை நிறுத்தத்தால் தமிழ்நாட்டு மக்கள் மிகக்கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழக மக்கள் கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றால், அரசுப் போக்குவரத்துக்கழகப் பணியாளர்களும், ஓய்வூதியதாரர்களும் கடந்த 6 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள், தொழிலாளர்கள் என இரு தரப்பினரின் பாதிப்புக்கும் காரணம் தமிழக அரசு தான். கடந்த 2011-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு இன்று வரை ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. போக்குவரத்துக்கழக பணியாளர்களிடமிருந்து பல்வேறு வழிகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.4500 கோடி இன்னும் அவர்களின் கணக்குகளில் செலுத்தப்படவில்லை. இதுகுறித்து கடந்த காலங்களில் சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை பிறப்பித்த உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை. மாறாக, கொஞ்சமும் மதிக்காமல் காற்றில் பறக்கவிடப்பட்டன.

போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் அரசு பாக்கி வைத்துள்ள ரூ.7000 கோடியை வழங்கும்படி கோரினால் அடுத்த 7 ஆண்டுகளில் தலா ரூ.1000 கோடி வீதம் வழங்குவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். 2011-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற தொழிலாளிக்கு 65 வயது ஆகியிருக்கும். அவர் ஓய்வூதியப் பயன்களைப்பெற இன்னும் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? கடந்த 6 ஆண்டுகளில் பல ஓய்வூதியர்கள் எந்த பயனையும் வாங்காமல் உயிரிழந்த நிலையில், அடுத்த 7 ஆண்டுகளில் எத்தனை ஓய்வூதியர்கள் உயிருடன் இருப்பார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. அதனால் தான் தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி 22 சுற்றுக்கள் அரசுடன் பேச்சு நடத்தி, அதிலும் பயன் கிடைக்காததால் தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர்.

போக்குவரத்துத் தொழிலாளர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு தான் உள்ளது. போக்குவரத்துத் தொழிலாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தான் போக்குவத்துத் துறை அமைச்சரின் முதன்மைப் பணியாகும். ஆனால், போக்குவரத்து அமைச்சரோ நிலைமையை மேலும் சிக்கலாக்கும் வகையில், கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தரப்பில் உள்ள நியாயங்களை உணராமல் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த சில துரதிருஷ்டவசமான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் அவர்களுக்கு அறிவிக்கை அனுப்பப் பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் இந்த அணுகுமுறை போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை தீவிரப்படுத்துமே தவிர, தீர்வை ஏற்படுத்தாது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் கோருவது நியாயமான ஊதியமும், தங்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பத் தர வேண்டும் என்பதும்தான். இந்தக் கோரிக்கை நியாயமற்றது என்று தமிழக அரசாலோ, உயர்நீதிமன்றத்தாலோ கூற முடியாது.

அவ்வாறு இருக்கும் போது போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் மிரட்டுவது முறையல்ல. மேலும் தங்களின் கோரிக்கைகள் குறித்து அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் கூறி வரும் நிலையில் இனியும் அவர்களுடன் பேச்சு நடத்தப் போவதில்லை என்றும், இந்த விஷயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிவருவது முறையல்ல. பிரச்சினையை தீர்க்க இந்த அணுகுமுறை உதவவே உதவாது.

போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து அமைச்சர் பேசுவதும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதும் தான் இன்றைய நிலையில் சரியான நடவடிக்கைகளாக அமையும். எனவே, தொழிலாளர்களை அழைத்துப் பேசி, அவர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe