
திண்டுக்கல்லில் மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில் சிதம்பரமும், ராஜம்மாளும் 4-வது மகனான கந்தசாமியுடன் வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் மிகுந்த பாசமும், அன்பும் காட்டி வந்துள்ளனர். இந்நிலையில் ராஜம்மாள் சில தினங்களுக்கு முன்பு தவறி விழுந்ததில் இடுப்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் உயிரிழந்தார்.
இதனால் அவரது உடல் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மனைவி இறந்த சோகத்தில் யாருடனும் பேசாமல் இருந்த சிதம்பரம் ராஜம்மாளின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் பரிசோதித்து பார்த்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து கணவன்-மனைவி ஆகியோரின் உடல்களையும் அருகருகே வைத்து உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.