வரும் தேர்தலில் கொரோனா நோயாளிகளை, ஓட்டுச்சாவடிகளுக்கு அழைத்து வந்து, ஓட்டுப்போட செய்ய வேண்டுமென, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், பிறருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஓட்டுச்சாவடியில் தேர்தல் பணி செய்யும் அரசு ஊழியர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகவே, கொரோனா நோயாளிகளை, தபால் ஓட்டுப்போட அனுமதி அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
டாக்டர் நிர்மலா: டீன் கோவை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை.
கொரோனா நோயாளிகள் ஓட்டுப்போட, தேர்தல் கமிஷன் என்ன ஏற்பாடு செய்துள்ளது என, தெரியவில்லை. தொற்று உள்ள நோயாளிகளை, ஓட்டுச்சாவடிக்கு கூட்டி வந்து ஓட்டுப்போட வைப்பது சிரமம்.
அது மற்றவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தபால் ஓட்டு போடுவது போல், கொரோனா நோயாளிகளும், தனியாக தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யலாம். அந்த பெட்டிகளை தனியாக வைத்து பாதுகாக்கலாம்.
டாக்டர் சுவாமிநாதன்: பொது மருத்துவத்துறை தலைவர், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை.
சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டு போடுவது சாத்தியம் இல்லை. அதனால் நோயாளிக்கும், அங்கு பாதிப்பு வரக்கூடும்.
தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் போது, வெளியில் வரக்கூடாது. தொற்று வந்து குணமடைந்தவர்கள் வந்து ஓட்டுப்போடலாம்; அதனால் பிரச்னை இல்லை. அட்மிட் ஆகியிருக்கும் நோயாளிகள், தபால் ஓட்டு போடுவதுதான் சரியாக இருக்கும்.
டாக்டர் வெங்கடேசன்: நரம்பியல் மருத்துவ நிபுணர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை
கொரோனா நோயாளிகளை பூத்துக்கு அழைத்து சென்று, ஓட்டுப்போட வைப்பது ரிஸ்க். பூத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு, இது பீதியை ஏற்படுத்தும்.
வேண்டும் என்றால் இவர்களுக்கு தனியாக பூத்து ஏற்பாடு செய்யலாம். இதில் பல்வேறு தொகுதிகளை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். அதனால் தபால் ஓட்டு முறைதான் பெஸ்ட். பெட்டியை தனியாக வைத்து விடலாம். ஒரு மாதம் கழித்து திறக்கும் போது, கிருமிகள் ‘லைவ்’ ஆக இருக்க வாய்ப்பு இல்லை.
வேல்ராஜ்: மாவட்ட செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, கொரோனா நோயாளிகளை ஏன் ஓட்டு சாவடிக்கு கூட்டி வர வேண்டும். தபால் ஓட்டு போட சொல்லி, தனியாக வாங்கி கொள்ளலாமே. இதனால் ஓட்டுச்சாவடியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அச்சம் ஏற்படும். அதனால் தபால் ஓட்டு பெறுவதுதான் நோயாளிகளுக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பு.
செந்தில்: அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்
ஓட்டு போடுவது அவரவர் உரிமை.
அதே நேரத்தில் அவர்கள் எந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ளனர் என்பதையும், அரசு புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா நோயாளிகளுக்கு, தபால் ஓட்டு போட அனுமதிப்பதுதான், சரியாக இருக்கும். சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு போய் தபால் ஓட்டை பெற்றுக்கொள்ளலாம். ஓட்டு போட விருப்பம் இல்லை என்றால், கட்டாயபடுத்தக்கூடாது.