நள்ளிரவு நேரத்தில் காட்டுப் பகுதிகளில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் உணவு தேடி வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பொதுமக்களை பீதி அடையச் செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட விளங்குகள் உணவு தேடி மக்கள் வசிப்பிடங்களுக்குள் புகுவது வாடிக்கையாகி வருகிறது.
இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் அச்சத்துடனே இருக்க வேண்டியதாக உள்ளது.
குன்னூர் அருகேவுள்ள கிராமம் சின்ன உபதலை. இது வனப்பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
அதனால் இங்கு விலங்கு மனித மோதல் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. இந்நிலையில் அங்குள்ள வீட்டின் உள்ளே இரண்டு கரடிகள் புகுந்த வீடியோ பரபரப்பை கிளப்பியுள்ளது.
உணவு தேடி வீடுகளுக்கு புகுந்த கரடியை கிராம மக்கள் பார்த்ததும் பீதி அடைந்து வீட்டை பூட்டி கொண்டனர்.
அங்குள்ள வீட்டுக்குள் புகுந்த கரடி திண்பதற்கு பொருளை தேடியது. அந்த நேரத்தில் வெளியே மற்றொரு கரடி வந்தது. அதை பார்த்ததும் உள்ளே இருந்த கரடி வெளியே ஓடிவிட்டது.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து மக்கள் பலரும் விலங்கு மனித மோதலை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.