அன்னிய மண்ணில் இந்திய சொத்தைக் காப்பாற்றத் துடிக்கும் மத்திய அரசு!

Published:

antrix devas scam - 2026

நமது நாட்டில் எத்தனையோ ஊழல்கள் நடந்து இருக்கின்றது.  கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றை முதல் நிறைய ஊழல்களை, நாம் பார்த்து இருக்கின்றோம். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டு போல, கண்ணுக்குத் தெரியாத பல ஊழல்கள் அரங்கேறி உள்ளது. 

வெளிநாட்டில் உள்ள நமது இந்தியாவின் சொத்துக்கள், பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு உள்ள, ஒரு வகையான ஊழல், நமது நாட்டில் நடந்தேறி உள்ளது. நமது நாட்டின் சொத்தைக் காக்க, அந்நிய ஆக்கிரமிப்பைத் தடுக்க, மத்திய பாஜக அரசு, எல்லா வகையிலும் போராடிக் கொண்டு இருக்கின்றது. 

ஒவ்வொரு இந்தியரின் உழைப்பில் சேகரிக்கப் படும், இந்தியாவின் வரித் தொகையைக் காப்பாற்ற, நமது மத்திய அரசு, எல்லா வகையிலும், முயன்றுக் கொண்டு இருக்கின்றது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த நாட்களில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் செய்த ஊழலின் துயரைத் துடைக்க, நமது சொத்தைக் காக்க, கடுமையாகப் போராடி வருகிறது, மத்திய பாஜக அரசு.

ஆன்ட்ரிக்ஸ் (Antrix) :

1992 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, தொடங்கப் பட்டது, “ஆன்ட்ரிக்ஸ்” (Antrix) நிறுவனம். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (ISRO – Indian Space Research Organization) தயாரிக்கும் பொருட்களை, வெளிச் சந்தைகளில் விற்பனை செய்யத் தொடங்கப் பட்ட, வர்த்தக நிறுவனம் ஆகும்.

டேவாஸ் (Devas) :

முன்னாள் இஸ்ரோ ஊழியரான, டாக்டர் சந்திரசேகர் அவர்கள், 2004 ஆம் ஆண்டு, “டேவாஸ் மல்டி மீடியா பிரைவேட் லிமிடெட்” (Devas Multimedia Private Limited) என்ற நிறுவனத்தை, மொரீசியஸ் போன்ற வெளிநாட்டின் முதலீடுகள் மூலம் பெங்களூரில் தொடங்கினார்.

டேவாஸ் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்கள், “டேவாஸ் -மொரீசியஸ் பிரைவேட் லிமிடெட்” (Devas – Mauritius Private Limited),

“டேவாஸ் – எம்பிளாயிஸ் பிரைவேட் லிமிடெட்” (Devas – Employees Private Limited),

“டெலிகாம் – டேவாஸ்  பிரைவேட் லிமிடெட்” (Telecom – Devas Private Limited).

antrix devas - 2026

ஆன்ட்ரிக்ஸ் – டேவாஸ் இடையேயான ஒப்பந்தம் :

ஆன்ட்ரிக்ஸ் – டேவாஸ் நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், 2005 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 28 ஆம் தேதி கையெழுத்தானது. அதில், இஸ்ரோவின் 2 தொலைத் தொடர்பு அலைக்கற்றையான “எஸ்” பேண்டு தொழில் நுட்பத்தை வழங்க வேண்டும். அதுவரை, எஸ் பேண்ட் அலைக்கற்றை, பாதுகாப்புத் துறைக்கும், பி.எஸ்.என்.எல். (BSNL), எம்.டி.என்.எல். (MTNL)  போன்றவற்றிற்கு  மட்டுமே பயன் படுத்தப்பட்டு வந்தது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

ஜிசாட் – 6 மற்றும் 6 ஏ (GSAT – 6, 6A), 12 ஆண்டு காலத்திற்கு, இஸ்ரோ குத்தகைக்கு விடும், டேவாஸ் நிறுவனம் கைப்பேசி மூலம் மல்டிமீடியா தொழில் நுட்பமான வீடியோ மற்றும் ஆடியோவைப் புகுத்தும். செயற்கைக்கோள் மூலம் கைப்பேசி என்பது, மிகவும் நவீனத் தொழில்நுட்பம் ஆகும்.

எந்தவித தொழில் நுட்பமும் இல்லாத டேவாஸ் நிறுவனத்திடம், இது போன்ற ஒப்பந்தம் போடப் பட்டது, மிகவும் ஆச்சரியமான விஷயம்.

அப்போதே, இந்திய விண்வெளித்துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், என மூன்று அமைச்சகங்களும், இந்த ஒப்பந்தத்திற்கு, தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

வழக்கமாக, இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தை, முக்கியப் பொறுப்பில் உள்ள பெரிய அதிகாரியே கையெழுத்திடுவர், ஆனால் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது, இடைநிலை அதிகாரி.

தள்ளுபடி செய்யப்பட்ட ஒப்பந்தம் :

2ஜி அலைக்கற்றை ஊழல், வெளிச்சத்திற்கு வந்த, 2011 ஆம் ஆண்டில், ஆன்ட்ரிக்ஸ் – டேவாஸ் இடையேயான ஒப்பந்தம், மத்திய அரசாங்கத்தால், திடீரென ரத்து செய்யப் பட்டது. தேசப் பாதுகாப்பு என்ற காரணம்  கூறப் பட்டாலும், இதற்குப் பின் மிகப்பெரிய ஊழல் அடங்கி உள்ளது என்ற சந்தேகம், அப்போதே, எழுந்தது.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு 12,500 கோடி ரூபாய்க்கு கொடுக்கப் படும் அலைக் கற்றையானது, வெறும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொடுக்கப் பட்டது, பலவிதமான சந்தேகங்களை மக்கள் மத்தியில் எழுப்பியது.

சர்வதேச வர்த்தகர் சபை :

ICC – International Chamber of Commerce என அழைக்கப் படும் “சர்வதேச வர்த்தகர் சபை” உலகமெங்கும், நல்ல முறையில் வணிகங்கள்  நடைபெற, தொடங்கப் பட்ட அமைப்பு. 

டேவாஸில் முதலீடு செய்த, மொரீசியஸ் முதலீட்டாளர்கள், சர்வதேச வர்த்தகர் சபையிடம் “மத்தியஸ்தம்” (Arbitration) செய்து வைக்க கோரிக்கை வைத்தனர்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

ஆட்சி மாற்றம் :

2014 ஆம் ஆண்டு, மக்களின் எழுச்சியால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், மன்மோகன் சிங் அரசு செய்த தவறை உணர்ந்து, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்தது. முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், ஆன்ட்ரிக்ஸ் இயக்குனர் K.R. ஸ்ரீதர் மூர்த்தி மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப் பட்டது.

பல கோடி ரூபாய் மதிப்பிலான, மக்களின் வரிப்பணம், அந்நிய செலவாணியாக வெளிநாட்டுக்கு சென்றதும், கண்டுபிடிக்கப் பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப் பட்டது.

டேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் தவறு செய்ததைக் கண்டு பிடித்ததைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT – National Company Law Appellate Tribunal) மூட உத்தரவிட்டது.

நிறுவனத்தை முடித்து விட நினைப்பது சரியானது என, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமும் (NCLT – National Company Law Tribunal) அறிவித்தது. அதே தீர்ப்பை, இந்திய உச்சநீதிமன்றம், 2022, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி, உறுதி செய்தது.

அன்றைய மன்மோகன் சிங் அரசு, சர்வதேச வர்த்தகர் சபை மத்தியஸ்த குழுவிடம் (Arbitration) தனது வாதங்களை சரிவர வைக்காததாலும், முறையான ஆவணங்களை வழங்காததாலும்,  இந்திய அரசு, ஈவுத் தொகையாக 4,500 கோடி கொடுக்க வேண்டும் என தீர்ப்பாயம், தீர்ப்பு அளித்து இருந்தது.

இந்தத் தீர்ப்பிற்கு சட்ட அங்கீகாரம் பெறுவதற்கு, வெளிநாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. 

கனடா மற்றும் பிரான்சில் உள்ள, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, இந்தியாவின் சொத்துக்களை, பறிமுதல் செய்ய, நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி உள்ளனர்.

தேவையே இல்லாமல், சிலர் செய்த தவறுகளுக்காக, இந்திய மக்களுடைய சுமார் 4,500 கோடி ரூபாய் பணம், தண்டத் தொகையாக செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

pm modi in kashi - 2026

தற்போது அந்தத் தொகையானது, வட்டியுடன் சேர்ந்து சுமார் 13,000 கோடி ரூபாயாக உள்ளது. மோடி அரசின் சாமர்த்தியத்தாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலமும், மன்மோகன் சிங் அரசால் நேர்ந்த அவமானத்தை, தற்போதைய இந்தியா அரசு தடுத்து நிறுத்தி உள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

ஒப்பந்தம் குறித்துக் கேட்ட போது, பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் வரவில்லை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். பிரதமருக்கே தெரியாமல், மிகப் பெரிய ஒப்பந்தம் போடப்படுவது எனில், அப்போது பிரதமரின் நிலை என்னவாக இருந்து இருக்கும்? என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.

ஜனவரி மாதம் 18 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், “மக்களின் வரிப்பணத்தை காப்பாற்ற, ஒவ்வொரு நீதிமன்றத்திலும், மோடி அரசுப் போராடி, முயற்சி செய்து வருகின்றது. இல்லை எனில், வெளிநாட்டு நடுவர் மன்றங்களில் வெற்றிக் கண்ட டேவாஸுக்கு,  மக்களின் வரிப்பணத்தை, தாரை வார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். 

579 கோடி ரூபாய் முதலீடாகக் கொண்டு வந்தது, டேவாஸ் நிறுவனம். அதில், 85% நமது நாட்டில் இருந்து, எடுத்துச் சென்று விட்டார்கள். முதலீட்டைக் கொண்டு வந்து, அந்த பணத்தை எடுத்து சென்று, அந்த பணத்தைக் கொண்டே, இந்திய அரசு மீது வழக்குத் தொடுத்து, தீங்கு விளைவிக்கிறார்கள். மன்மோகன் சிங் அரசின் தவறான செயலால் ஏற்பட்ட முறைகேடுகளைக் கண்டுபிடித்த மோடி அரசு, மக்களின் வரிப் பணத்தை காக்கும்” எனக் கூறினார்.

எந்தவித தவறும் செய்யாமல், மக்களுடைய பணத்தைக் காக்க, பல நீதிமன்றங்களில் வாதாடி, போராடி, நமது சொத்துக்களை மீட்டு கொண்டு வரும், மத்திய அரசின் சாதனையை போற்றுவதுடன், இதற்கு முன்னர் ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் சோதனையையும்,  நாம் என்றென்றும் நினைவில் கொள்வோம்…

  • அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Related articles

Recent articles

spot_img