
கேரள முதல்வர் பினராயி விஜயனின் விடியோ ஒன்றை வெளியிட்டக் குற்றத்துக்காக, கேரள மாநிலத்தின் பொது நிர்வாகத் துறை உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பலராலும் வேகமாகப் பகிரப்பட்டு வரும் அந்த விடியோவில், கேரள முதல்வர் பினராயி விஜயன், துபை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.
அதில், அவர் முழுக்கை வெள்ளைச் சட்டை அணிந்துகொண்டுள்ளார். அவர் எப்போதும் வழக்கமாக அணியும் வெள்ளை வேட்டிக்கு பதிலாக கருப்பு பேண்ட் அணிந்துள்ளார்.
எப்போதும் பினராயி விஜயன் கேரள மாநிலத்துக்குள்ளாகட்டும், வெளி மாநிலத்துக்குச் செல்லும் போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைத்தான் அணிவது வழக்கம்.
அதற்கு மாறாக, அவர், துபையில் வெள்ளைச் சட்டை, கருப்பு பேண்ட் அணிந்திருப்பது மக்களிடையே ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.
பினராயி விஜயன் துபை சென்றிருந்த போது பதிவான இந்த விடியோவை, கேரள அரசுத் துறை உதவியாளர் ஏ.மணிக்குட்டன், தனது பேஸ்புக் குழுவில் பகிர, அது சமூக வலைத்தளத்துக்கு ஊடுருவியது.

உடனடியாக, இது குறித்து மாநில தலைமைச் செயலகத்துக்கு தகவல் வந்ததும், மணிக்குட்டனுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதில், மாநில முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.