தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நிறைவடைந்தது. வேட்புமனு செய்வதற்கான கால அவகாசம் இன்று நிறைவடையும் நிலையில், கடைசி நாளான இன்று ஏராளமானோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெற 7ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு, சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
இதுவரை மொத்தமுள்ள 12,838 மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 39ஆயிரத்து307 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளில் போட்டியிட, 1557 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.