
காஷ்மீரைச் சேர்ந்தவர் அரூசா பர்வேஸ் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ம் தேதி வெளியாயின.
இதில் அரூசா பர்வேஸ் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்திருந்தார்.
இதையடுத்து அவரது புகைப்படம் (ஹிஜாப் அணியாமல்) சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒருவர் கூறும்போது, ‘கர்நாடகாவில் முஸ்லிம் பெண்கள், சிறுமிகள் ஹிஜாபுக்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் காஷ்மீரில் நமது சகோதரி முகத்தை ஹிஜாப் கொண்டு மறைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை நாம்அனுமதிக்க முடியாது. அடுத்த முறை அவர் இவ்வாறு புகைப்படத்தை வெளியிட்டால் அவரது தலையை வெட்டுவோம்” என்று கூறியுள்ளார்.
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து அரூசா பர்வேஸ் கூறும்போது, ‘ஹிஜாப் அணிவது அல்லது அணியாதது ஒருவரின் மதத்தின் மீதான நம்பிக்கையை வரையறுக்காது.
ஒருவேளை, அவர்கள் ட்விட்டரில் செய்யும் ட்ரோல்களை விட நான் அல்லாவை அதிகம் நேசிக்கிறேன். நான் இதயத்தால் ஒரு முஸ்லீம். ஹிஜாப் மூலம் அல்ல’ என்றார்.