ஆளும் கட்சி பிரமுகரின் மகள் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்பதற்காக பள்ளியின் முதல் மதிப்பெண் மாணவிக்கு டிசி வழங்கிய செயலால் அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம், பலமனேரி பகுதியில் பிரம்மர்ஷி என்ற பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மிஸ்பா, படிப்பில் தொடர்ந்து முதல் மதிப்பெண் பெற்று வந்தார்.
இந்நிலையில், இதே வகுப்பில் படித்து வந்த பூஜிதா என்ற மாணவி இரண்டாம் இடம் பிடித்து வந்தார். இவர் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் என்பவரின் மகள் ஆவார்.
அனைத்து தேர்வுகளிலும் பூஜிதா 2ஆம் இடத்தையே பிடிக்க முடிந்ததால் தன்னுடைய போட்டியாளரான மிஸ்பா இருக்கும்வரை தன்னால் முதல் இடத்தை பிடிக்க முடியாது என்று தந்தையிடம் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து தனது மகளுக்கு கடும் போட்டியாக இருக்கும் முதல் மதிப்பெண் மாணவி மிஸ்பாவை பள்ளியை விட்டு நீக்க தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார்.
அதன்படி அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் மூலம் மாணவி மிஸ்பாவுக்கு டிசி வழங்கி பள்ளியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
தன் மீது பாரபட்சமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் மனமுடைந்த மிஸ்பா, உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட பள்ளி நிர்வாகமே பொறுப்பு எனக் கூறி மிஸ்பாவின் பெற்றோர்கள், உறவினர்கள், மாணவர் சங்கத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மிஸ்பா தனது தந்தைக்கு ஆங்கிலத்தில் எழுதியுள்ள கடிதத்தில், அப்பா என்னை மன்னிக்கவும்.. என்னால் உங்களுக்கு பல பிரச்சனைகள்.. எனது நெருங்கிய தோழியே எனது மரணத்திற்கு காரணம்.. அனைத்திற்கும் நீ தான் காரணம் பூஜிதா..!
அப்பா, என்றும் உங்களை விட்டு போக முடியாது ஆனால், இன்று உங்களை விட்டு மீண்டும் வர முடியாத இடத்திற்கு செல்கிறேன். என் மரணத்திற்கு ஒரே காரணம் பூஜிதா.. பூஜிதா.. பூஜிதா.. இப்படிக்கு உங்கள் மகள் மிஸ்பா. விடைபெறுகிறேன் என்று கூறியுள்ளார்.