வேலூர் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளுக்கு மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், இதனை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் இன்று கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், வேலுார் அருகே தொரப்பாடி அரசு பள்ளி வகுப்பறையில், மாணவியர் முன், பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் வீரத்தை காட்ட, இரும்பாலான இருக்கை மற்றும் மேஜைகளை உடைக்கும் வீடியோ வெளியானது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி, வேலுார் ஆர்.டி.ஓ பூங்கொடி, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் நேற்று அப்பள்ளியில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சம்மந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோரை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரச்செய்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விசாரணை நடத்தினார்.
அப்போது, பள்ளியில் பிரிவு உபசார விழா நடத்த மாணவர்கள் கேட்டதற்கு தலைமை ஆசிரியர் அனுமதிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மேஜை நாற்காலிகளை உடைத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவர்கள் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு மொபைல்போன் எடுத்து வர தடை விதித்துள்ளது. மொபைல் போன் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவை மீறி வகுப்பறைக்குள் மொபைல்போன்களை மறைத்து எடுத்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
![மாணவர்கள் மொபைல் எடுத்து வர தடை வேலூர் ஆட்சியர் அதிரடி 1 images 2022 04 26T131502.330](https://dhinasari.com/wp-content/uploads/2022/04/images-2022-04-26T131502.330.jpeg)