வரும் மே22ல் நடைபெற உள்ள மயிலாடுதுறை
தருமபுரம் ஆதீனப் பட்டணப்பிரவேசத்தில் அனைத்து ஆதீனங்களும் கலந்து கொள்வார்கள் என செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள்
குத்தாலத்தில் இன்று தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான உக்தவேதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாசாரிய சுவாமிகள் கூறியதாவது,
மனிதன் பிறந்ததுமுதல், இறக்கும்வரை யாரோ சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் மகா சந்நிதானங்களை சாதாரண மனிதரோடு ஒப்பிடுவது தவறு. பட்டணப்பிரவேசம் என்பது ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு குருமகா சந்நிதானங்கள் செல்லக்கூடிய நிகழ்வு அல்ல. சிஷ்யர்கள் தங்களது குருவை தாங்கிச்செல்லக்கூடிய உத்ஸவம். இதனை ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஆதீன சம்பிரதாயங்கள் மீது நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாதவர்கள் எதற்காக அதுகுறித்து பேசவேண்டும். தமிழக முதல்வர் பட்டணப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி வழங்கி நேற்று இரவு தெரிவித்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். மே22இல் நடைபெறும் தருமபுரம் ஆதீனப் பட்டணப்பிரவேசத்தில் ஆதீனங்கள் எல்லோரும் கலந்து கொள்வார்கள் என்றார்.





