தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி மற்றும் வசனத்தை அதன் இயக்குநர் கேவி ஆனந்த் நீக்கியுள்ளார். புதிரை வண்ணார் விடுதலை இயக்கம் என்ற அமைப்பின் தலைவரான கி.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’ என்ற படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், வண்ணார் சமூகத்தை சேர்ந்த பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தும் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த ஆட்சேபனைக்குரிய வசனத்துடன் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும். அந்த வசனத்தை நீக்கிய பின்னரே, தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன், ‘சர்ச்சைக்குரிய வசனத்தை ஆனேகன் படத்தில் இருந்து, அந்த படத்தின் இயக்குநரே முன்வந்து நீக்கிவிட்டார்’ என்று கூறினார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘அனேகன் படம் வெள்ளிக்கிழமை (இன்று) வெளியாகுகிறது. மனுதாரர் அந்த படத்தை பார்த்து விட்டு, சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டு விட்டதா? வேறு ஏதாவது வசனங்கள் இடம் பெற்றுள்ளதா? என்பதை இந்த கோர்ட்டுக்கு தெரிவிக்கலாம். வழக்கு விசாரணையை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று உத்தரவிட்டார். இதனிடையே ‘அனேகன்’ இன்று 750-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது. மேலும், அனேகனுக்கு முழு கேளிக்கை வரிவிலக்கு அளித்துள்ளது தமிழக அரசு. அனேகன் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு கேளிக்கை வரிவிலக்குக்கு பரிந்துரைக்கும் குழு முன்பு படத்தை திரையிட்டுக் காட்டினர் தயாரிப்பாளர்கள். அக்குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து, படத்து முழு வரிவிலக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது அனேகன் குழுவுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. காரணம் சமீபத்தில் வந்த பெரிய படங்களான ஐ, என்னை அறிந்தால் போன்றவை யு ஏ சான்று பெற்றதால், வரி விலக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் அனேகன் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சி- வசனம் நீக்கம்!
Popular Categories


