எடப்பாடி தரப்பை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்..

Published:

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆக 1-ந்தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆக 1-ந்தேதி சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அ.தி.மு.க. சார்பில் பங்கேற்க யாருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் அழைக்கும் அணிதான் அங்கீகரிக்கப்பட்ட அ.தி.மு.க.வாக கருதப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதன்படி தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்துக்கு எடப்பாடி தரப்பை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அழைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
images 2022 07 30T134611.063 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img