சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிம்மம் மலையாள புத்தாண்டு ஆவணி மாத பூஜை வழிபாடு இன்று துவங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மலையாள புத்தாண்டு ஆவணி மாத பூஜை வழிபாட்டுக்கு சபரிமலை நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஷ்வரன் நம்பூதிரி நடை திறந்தார். மாலை பூஜைகள் எதுவும் நடைபெறத நிலையில் இன்று புதிய தந்திரியாக கண்டரரு ராஜிவரரு பொறுப்பேற்றார். அதன்பின்பு ஆவணி மாத 1-ந்தேதியான இன்று நிர்மால்ய தரிசனம், அஷ்டாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
இதன்பின் கோவிலின் கிழக்கு மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜிவரரு தலைமையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதன்பின்னர் லட்சார்ச்சனையும் நடத்தப்படும். 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் அஷ்டாபிஷேம், உதயாஸ்தமன பூஜை,களபாபிஷேகம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெறும். 21-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். அன்றுடன் ஆவணி மாத பூஜைகள் நிறைவடையும்.
மீண்டும் ஓண பண்டிகை பூஜைகளுக்காக செப்டம்பர் 6-ந்தேதி கோவில் நடை திறக்கப்படும். இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.





