அதிமுக பொதுக்குழு செல்லாது- சென்னை உயர்நீதிமன்றம்..

Published:

739528 chnneiahghcourt 2 - 2026

அதிமுக பொதுக்குழு வழக்கு எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்  இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்  என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாள்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.தனி கூட்டம் கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட சட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்  என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இத்தீர்ப்பால் அதிமுகவில் இரட்டைத் தலைமையே நீடிக்கிறது. 

சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடுத்தனா்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி திட்டமிட்டபடி பொதுக் குழுவை நடத்தலாம் என்று தீா்ப்பளித்தாா். இதை எதிா்த்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயா்நீதிமன்றமே, 2 வாரங்களில் விசாரித்து தீா்வு காண உத்தரவிட்டது.

இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மீண்டும் பட்டியலிடப்பட்டிருந்தன. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து ஆகியோா் சாா்பில் உயா் நீதிமன்ற பதிவுத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டதுடன், தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடமும் முறையிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பாா் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.

அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 10, 11-ஆம் தேதிகளில் விசாரித்தாா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , இந்த வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.ஓபிஎஸ் க்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளதை அடுத்து, சென்னையில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன்பாக திரண்ட அவரது  ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img