
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவடைந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்துள்ளார்.நாளை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கட்சிஅலுவலகம் செல்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் வருவாய்துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
அத்துடன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒரு மாத காலத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது.
அதிமுக அலுவலகசாமியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு, விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், வழக்கை ஒரு வாரத்திற்கு பிறகு விசாரிப்பதாகவும் கூறி உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல விதித்த தடை இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
தற்போது, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் இருப்பதால் நாளை கட்சி தொண்டர்களுடன் தலைமை அலுவலத்திற்கு செல்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள தனது இல்லத்திற்கு வந்துள்ளார். இவரை காண்பதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் சேலம் வந்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகம் செல்வது தொடர்பாக இவர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று தெரிகின்றது.




