![பிறந்த பெண் குழந்தையை கணவர் வீட்டில் கொல்ல சொன்னதால் எலி மருந்து தின்று உயிரை விட்ட பெண்.. 1 images 37 2](https://dhinasari.com/wp-content/uploads/2022/08/images-37-2.jpeg)
![பிறந்த பெண் குழந்தையை கணவர் வீட்டில் கொல்ல சொன்னதால் எலி மருந்து தின்று உயிரை விட்ட பெண்.. 2 89d594580de420152b542fc65c98a7711661176282649194 original](https://dhinasari.com/wp-content/uploads/2022/08/89d594580de420152b542fc65c98a7711661176282649194_original-1024x768.jpg)
பிறந்த பெண் குழந்தையை கணவர் வீட்டில் கொல்ல சொன்னதால் எலி மருந்து தின்று உயிரை விட்ட பெண் வீடியோவில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருமணமான முதல் நாளில் இருந்தே காதல் திருமணம் செய்ததாக கூறி மாப்பிள்ளை வீட்டார் பிரச்சினையை கிளப்பினார்கள். தினம் தோறும் அக்ஷாவை ஏதாவது குறை சொல்லி அவரை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷா (25). அதே பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருதரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின்போது 50 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
திருமணமான முதல் நாளில் இருந்தே காதல் திருமணம் செய்ததாக கூறி மாப்பிள்ளை வீட்டார் பிரச்சினையை கிளப்பினார்கள். தினம் தோறும் அக்ஷாவை ஏதாவது குறை சொல்லி அவரை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே 50 பவுன் நகைகளையும் கணவர் வீட்டார் வாங்கி வைத்துக் கொண்டனர். மேலும் அக்ஷாவின் 5 பவுன் தஙக வளையல்களை கணவரின் சகோதரி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அக்ஷாவுக்கு தெரியாமலேயேயே இந்த வளையல்களை எடுத்துக் கொண்டனர். அந்த வளையல்களை கணவரின் சகோதரி திருடிக் கொண்டதாக அக்ஷா குற்றம் சாட்டினார். இதனால் அக்ஷாவுக்கும், கணவர் குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அக்ஷாவின் தலையில் கணவன் குடும்பத்தினர் அடித்தனர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அக்ஷாவை கணவர் குடும்பத்தினர் அதிக அளவில் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த அக்ஷா 5 முறை தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அத்தனை முறையும் அவர் உயிர் பிழைத்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அக்ஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவருக்கு சோதனை அதிகரித்தது. அக்ஷாவின் பெண் குழந்தையை கணவரும், அவரது குடும்பத்தினரும் வெறுத்தனர். எங்களுக்கு பெண் குழந்தை வேண்டாம். அதை கொன்று விடு என்று அக்ஷாவை கணவர் குடும்பத்தினர் மிரட்டியதாக தெரிகிறது.
இதற்கு மேலும் கணவர் வீட்டில் இருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த அக்ஷா குழந்தையை எடுத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தான் உயிருடன் இருந்தால் பெண் குழந்தையை கொல்ல சொல்லி மீண்டும் தன்னை சித்ரவதை செய்வார்கள் என்று பயந்த அக்ஷா தனது மகளை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்க்க முடிவு செய்தார்.
எலி மருந்தை தின்று அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அக்ஷா தற்கொலை செய்வதற்கு முன்பு கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், தான் எதற்காக தற்கொலை செய்கிறேன் என்பதையும் வீடியோவில் வாக்குமூலமாக பதிவு செய்தார். அதன் பிறகு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்தார். பின்னர் எலி மருந்தை தின்று உயிருக்கு போராடினார். அவரை பெற்றோர்கள் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அக்ஷாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரது வீடியோ பதிவு மற்றும் உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்திலும், வீடியோவிலும் அக்ஷா கூறி இருப்பதாவது:- நான் எனது கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாவத்துக்கு தண்டனையாக தற்கொலை செய்து கொள்கிறேன். இந்த உலகம் எவ்வளவு மாறி விட்டது. ஆனாலும் ஏன் பெண் குழந்தையை வெறுக்கிறார்கள். பெண் குழந்தையை பெற்றெடுத்தது எனது தவறா? எனது குழந்தையை கொலை செய்ய கணவர் வீட்டார் நிர்ப்பந்தம் கொடுத்தனர். எனவே எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது குழந்தையை காப்பாற்ற நான் தற்கொலை செய்து கொள்கிறேன். திருமணத்தின் போது எனக்கு போடப்பட்ட நகை, சீர்வரிசை பொருட்கள், திருமணத்துக்கு முன்பு எனது கணவர் வீட்டுக்கு நான் செலவு செய்த ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை திருப்பி வாங்கி அவர்களிடம் இருந்து நஷ்ட ஈட்டையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
அது எனது பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும். இது குழந்தையை பெற்ற இந்த தாயின் போராட்டம். இவ்வாறு அவர் கூறி இருந்தார். இந்த வீடியோ மற்றும் கடிதத்தின் அடிப்படையில் போலீசார் அக்ஷாவின் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் உள்பட 7 பேர் மீது வரதட்சணை கொடுமை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 5 முறை தற்கொலைக்கு முயன்று 6-வது முறையாக அக்ஷா தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.