

கேரளா ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது.
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பனுக்கு அணுவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று புறப்பட்டது.
சபரிமலை கோயில் போல் வடிவமைத்த பல்லக்கு ரத வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு போலீஸ் சார்பில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு 73 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து 26-ந்தேதி மதியம் பம்பை கணபதி கோவிலுக்கு வரும் அந்த அங்கி, மாலை சந்நிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அய்யப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 453 பவுன் தங்க அங்கி, கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச.27-ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜையில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி பங்கேற்கமாட்டாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரியின் தாய்மாமா இறந்ததையடுத்து, சபரிமலை சம்பிரதாயப்படி, சன்னிதானம் பூஜை வழிபாடுகளில் இருந்து 10 நாள்கள் விலகியுள்ளாா் .மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரியின் தாயாரின் சகோதரரும், திருச்சூா் பெருங்கோட்டு கரை கிழக்கு செருமுக்கு மனைக்கள் சி.கே.கோதன் நம்பூதிரி மரணமடைந்ததால் சபரிமலை மேல்சாந்தி கே ஜெயராமன் நம்பூதிரி 10 நாள்களுக்கு சன்னிதானத்தில் உள்ள சபரி விருந்தினா் மாளிகைக்கு மாற்றப்பட்டாா்.
அதற்கு பதிலாக தந்திரி கண்டரரு ராஜீவரு பூஜை முறைகளை ஏற்று நடத்துவாா். மேலும், ஐயப்பனுக்கு பூஜை பணிகளை திருவல்லா காவுபாகம் நாராயணன் நம்பூதிரி பூஜைகளை மேற்கொள்வாா்.10 நாள்களுக்குப்பின் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி மீண்டும் சபரிமலை சன்னிதானத்தில் சேவையை தொடங்குவாா் என்பது குறிப்பிடத்தக்கது.






