
சிவகாசி அருகே பட்டாசு கழிவு வெடித்து சிதறியதில் பள்ளி மாணவர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த வைரவன் (14 வயது) வேலாயுதம் (வயது 9) இருவரும் அப்பகுதியில் உள்ள ஓடையோரம் பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது இவர்கள் வெடித்த பட்டாசு தீப்பொறி அருகில் இருந்த பட்டாசு தயாரிப்பின் போது வெளியாகும் கழிவு பட்டாசு குவியலில் பட்டு அவை வெடித்து சிதறியதில் இருவருக்கும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.
இருவரும் 40 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்திற்கு காரணமாக இருந்த பட்டாசு கழிவுகள் ஆலையிலிருந்து கொட்டப்பட்டதா அல்லது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் வெளியான கழிவுகளா என வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




