
திருப்பதியில் ஜனவரி 12-ந்தேதி முதல் 31-ந்தேதி வரைக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகளை பக்தர்கள் www.tiruptibalaji.ap.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் நேற்று 62, 856 பேர் தரிசனம் செய்தனர். 22,115 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு 6 ஆயிரம் அறைகள் வாடகைக்கு விடப்பட்டு வந்தது. சேதம் அடைந்த அறைகள் ரூ.110 கோடி செலவில் தேவஸ்தானம் சார்பில் சீரமைக்கப்பட்டன. மேலும் பக்தர்கள் தங்கும் காட்டேஜ் கெஸ்ட் ஹவுஸ்களில் ஏ.சி, வெந்நீர், மற்றும் நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தங்கும் அறை வாடகை 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக 7,000 அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது.
இந்நிலையில் கவுஸ்தபம், நந்தகம், பாஞ்ச ஜன்யம், வகுலமாதா தங்கும் அறைகள் ரூ. 600 லிருந்து ரூ. 1000 ஆக வாடகை உயர்த்தப்பட்டிருக்கிறது. இம்மாதம் 1ம் தேதி முதல் நாராயணகிரி தங்கும் விடுதிகளில் ரூ. 150-ல் இருந்து ரூ. 750 ஆக வாடகை உயர்த்தப்பட்டு உள்ளது.
நாராயணகிரி- 4 விடுதிகளில் ஒவ்வொரு அறையும் ரூ.750-ல்இருந்து ரூ. 1,700 ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கார்னர் சூட் வாடகை ரூ. 2,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்பெஷல் டைப் காட்டேஜ் வகைகள் ரூ. 750-ல் இருந்து ரூ. 2,800 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
ரூ. 50 வாடகைக்கு விடப்படும் எஸ்.எம்.சி, எஸ்.என்.சி, ஏ.எஸ்.சி, எஸ்.வி.சி போன்ற விடுதிகள் மற்றும் ரூ.100 வாடகை பெறப்படும் ராம்பக்கீச்சா, வராக சுவாமி, எஸ்என்ஜிஎச், எச்விடி. சிஏடிசி,டிபிசி, சப்தகிரி வாடகை விடுதிகளின் வாடகையும் பன் மடங்குஉயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகன கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது. திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் பேருந்து கட்டணம், லட்டு, வடை பிரசாத விலையும் ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டது.
அறை வாடகை உயர்வுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . அறை வாடகை உயர்த்தப்பட்டதற்கு தெலுங்கு தேசம், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கட்டிட அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் அறை கட்டணத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





