ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது அதிகரிப்பு- தமிழிசை..

Published:

images 66 1 - 2026

ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது என்றும், ஆளுநர் – தமிழக அரசு விவகாரத்தில் இருபுறமும் வரம்பு மீறாமல் பேச வேண்டும் என்றும் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பொங்கல் கொண்டாடினார். பாரம்பரிய முறைப்படி தனது இல்லத்தில் மண்பானையில் பொங்கல் வைத்தார். மேலும், இந்தியா G20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதை உணர்த்தும் விதமாக இல்லத்தின் நுழைவாயிலில் “ஜி20 இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று கோலமிடப்பட்டிருந்தது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் ஒற்றுமையாக தமிழரின் பெருமையை உயர்த்துவதாக இந்தியாவின் பெருமையை உயர்த்துவதாக இருக்க வேண்டும். கரோனாவுக்கு பிறகு அனைவரும் இணைந்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கிறோம். இவ்வாறு பொங்கல் கொண்டாடுவதற்கு இறைவன் ஆசியும், தடுப்பூசியும்தான் காரணம் .

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

சீனா உள்ளிட்ட நாடுகள் கரோனாவில் இருந்து வெளிவராத நிலையில், இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது. அதற்குக் காரணம் பிரதமர், முன்களப் பணியாளர்கள். இவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இணையதளங்களில் மிகக் கீழ்த்தரமாக விமர்சிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஒரு சிலர் ஆளுநரைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். முதல்வர் யாரையும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என்று சொல்லியபோதும் ஒரு சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடுதான் தொடங்க வேண்டும் என்பதுதான் மரபு. கருத்து மோதல்கள் இருக்கலாம்; கருத்து வேற்றுமை இருக்கலாம். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாடு என்கிற பெயருக்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. இதை அறிவித்த காமராஜருக்கு பெருமை உண்டு. அதை சட்டமாக்கிய அண்ணாதுரைக்கும் பெருமை உண்டு.

இருபுறமும் வரம்பு மீறாமல் பேச வேண்டும். கருத்து மோதல்கள் இல்லாமல் கருத்து பரிமாற்றமாக பேச வேண்டும். ஆளுநர்களை வம்புக்கு இழுப்பது தற்போது அதிகரித்துள்ளது.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

இன்றிலிருந்து புதுவையில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம், இங்கே (தமிழகத்தில்) கொடுக்கிறார்களா இல்லையா என்பதை கேள்விக்குறியோடு நிறுத்திக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img