
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டுள்ளார் .
ஈரோடு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கி விட்டது. கடந்த பொதுத் தேர்தலைப் போலவே, இடைத்தேர்தலிலும் இந்தத் தொகுதி தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு நிறுத்தப்பட்டு உள்ளார்.

தே.மு.தி.க.வின் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் மேனகா நவநீதன், சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் ஆதரவு திரட்டி வந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
இந்நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது ,
மறைந்த திருமகன் ஈவெரா தொகுதி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினார். மகன் விட்டுச் சென்ற பணிகளை ஆற்ற தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்துள்ளார். மண்ணின் மைந்தர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மாபெரும் வெற்றியே தேடித் தர வேண்டும். முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெற்ற ஒரு லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம். மக்களை தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டத்தால் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் நடைமுறைப்படுத்தினோம். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 1.9 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சம்பத் நகரில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து பிரசாரத்தின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்து வருகிறார்.
ஈரோடு சம்பத் நகரில் வாக்கு சேகரித்து முதல்வர் பேசுகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்திற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலகு பெற்று தருவதே தனது லட்சியம் என்றும், திமுகவின் அடித்தளமே ஈரோடுதான் என்றும் முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தின்போது பேசினார்.





