
திருவனந்தபுரம் காசர்கோடு வந்தே பாரத் ரயிலில் பாலக்காடு காங் எம்.பி.யை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.போஸ்டரை ரயில்வே போலீசார் கிழித்து அகற்றினர்.
கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயிலை நேற்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் இந்த ரயில் மாலை 4.30 மணியளவில் ஷொர்ணூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஸ்ரீகண்டனை வாழ்த்தி ரயிலில் போஸ்டர் ஒட்டினர்.
தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து போஸ்டர்களை கிழித்து அகற்றினர். ரயிலில் போஸ்டர் ஒட்டியதற்கு பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து எம்.பி., ஸ்ரீகண்டன் கூறுகையில், ”ரயிலில் போஸ்டர் ஒட்டியது யார் என்று எனக்கு தெரியாது. இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.




