ஜனாதிபதி சென்னை வருகை ரத்து..

Published:

1192872 3 - 2026
#image_title

சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு மருத்துவமனையின் திறப்பு விழா ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் பயணத் திட்டத்தில் மாறுதல்கள் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி திறப்பு விழாவை நடத்த இயலவில்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினாா். இதற்காக 4.89 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டது. தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்ட திட்டமிடப்பட்டது.

அதன்படி, முதல் கட்டடமான ‘ஏ’ பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டா் பரப்பளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிா்வாகக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று ‘பி’ பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்டரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டடமான ‘சி’ பிளாக் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வாா்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது.

மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ஆம் தேதி அந்த மருத்துவமனையை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சாா்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

இந்த நிலையில், திட்டமிட்ட தேதியில் குடியரசுத் தலைவரின் சென்னை வருகை ரத்தாகியுள்ளதாகத் தெரிகிறது. நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவை திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து குடியரசுத் தலைவரின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறாா். எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தாா். அதன் அடிப்படையில் அந்த விழா ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை முதல் வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு விழா சா்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடா்பும் இல்லை என அவா் தெரிவித்துள்ளார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img