தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திருப்புல்லாணி, ராமேசுவரம் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் சென்றார். அங்கு ஆட்சியர் விஷ்ணுசந்திரன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதன் பின்னர் அவர் திருப்புல்லாணியில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ராமாயண காவியத்துடன் நெருங்கிய தொடர்புடைய தர்ப்பசயன ராமர் தலத்தில் வீற்றிருக்கும் ஆதிஜகநாதப் பெருமாள் கோவிலுக்குச் சென்றார். அங்கே அனைத்து பிராகாரங்களையும் சுற்றி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மூலவர் மற்றும் உத்ஸவரை தரிசித்தார். சிறப்புக் கோலத்தில் தர்ப்பசயனத்தில் உள்ள ஸ்ரீராமரையும் தரிசித்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஆளுநர் ரவி அங்கிருந்து காரில் புறப்பட்டு ராமேசுவரம் ராமநாதஸ்வாமி கோவிலுக்குச் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பளிக்கப்பட்டது. கோவிலில் மூலவர் ராமநாத ஸ்வாமியை தரிசித்த ஆளுநருக்கு பட்டர்கள் பிரசாதம் வழங்கினார்கள்.
கோவிலை விட்டு வெளியே வந்த ஆளுநர் ராமநாதஸ்வாமி கோவில் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்திருந்த தூய்மை பாரத திட்டத்தின்கீழ் நடைபெற்ற பணியில் கலந்துகொண்டார். மேலும் அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
ராமேஸ்வரத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.
முன்னதாக திருப்புல்லாணி, ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி ஆலயவழிபாட்டுக்கு வந்தார்!
திருப்புல்லாணி கோயிலில் தாம் தர்ப்பசயன ராமரை தரிசித்தது குறித்து ஆளுநர் பதிவிட்ட கருத்து:
“ராமேஸ்வரம் அருகே உள்ள திருப்புல்லாணியில் தசரத மன்னர் புத்திர காமேஷ்டி பூஜை மற்றும் தர்பசயனத்தில் பிரபு ஸ்ரீ ராமர் இருக்கும் ஸ்ரீ ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். இங்கு தர்பையில் சயன கோலத்தில் ஓய்வெடுத்தபோதுதான் பிரபு ஸ்ரீ ராமர், இலங்கைக்கு பாலத்தை கட்ட முடிவெடுத்தார். இப்பகுதி முழுவதும் ஸ்ரீ ராமரின் புராண கதைகளால் நிரம்பியுள்ளது. அயோத்தியில் பிரமாண்டமான பிரபு ஸ்ரீராமர் கோயிலின் திறப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் உள்ளூர் மக்களிடையே முழு அளவிலான உற்சாகம் நிலவுகிறது. நமது பன்முக மக்கள் மற்றும் இடங்களுக்கு மத்தியில் ஒரே குடும்பம் என்ற தீவிர உணர்ச்சிப் பிணைப்பு, பாரதத்தின் எண்ணத்தையும் அடையாளத்தையும் உருவாக்கி நிலைநிறுத்துகிறது.” – ஆளுநர் ரவி