நேற்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில் பெரியார் சிலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்து கூறியதில் இருந்தே தமிழகத்தில் ஒரு அசாதாரண நிலை இருந்து வருகிறது. தமிழக அரசியல் தலைவர்களின் பேச்சும், அறிக்கைகளும் வன்முறைக்கு வித்திடுவதாகவும் இருந்தது
இந்த நிலையில் நேற்றிரவு திருப்பத்தூரில் பெரியாரின் சிலைகளை சேதப்படுத்திய விவகாரம், எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றியது போல இருந்தது. இதனால் அதிரடியாக விசாரணை செய்த போலிசார் பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக இருவரை கைது செய்தனர். .
இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் கோவை சித்தாபுதூர் என்ற பகுதியில் இயங்கி கொண்டு வந்த பாஜக அலுவலகம் மீது 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இந்த பெட்ரோல் குண்டுகளை இரண்டு மர்ம நபர்கள் வீசிவிட்டு மாயமாய் மறைந்து விட்டதாகவும், அவர்களை பிடிக்க போலீசார் வலைவீசியதாகவும் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு பெரியார் சிலை சேதப்படுத்தியதன் எதிரொலியாக இருக்கலாம் என்பதால் தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கும் பாஜக அலுவலங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது