திருச்சி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரில் உஷா என்ற கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனை நடத்திய காவல்துறை ஆய்வாளர் அந்த பைக்கை நிறுத்தம்படி சைகை காட்டியுள்ளார். ஆனால் உஷாவின் கணவர் இதனை கவனிக்காமல் வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதனையடுத்து மற்றொரு பைக்கில் விரட்டி சென்ற ஆய்வாளர் காமராஜ், உஷா சென்ற பைக்கை எட்டி உதைத்ததாகவும், இதனால் தடுமாறி இருவரும் சாலையில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பின்னால் வந்த வேன், கர்ப்பிணி உஷா மீது மோதியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சாலைமறியல் செய்து ஆய்வாளர் காமராஜை கைது செய்யும்படி போராட்டம் செய்தனர். இதனையடுத்து காமராஜ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் திருவெறும்பூர் பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.