
சென்னை: ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு முதல் கட்டமாக தலா ரூ. 10 லட்சம் நிவாரண உதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
கடந்த 2017 நவம்பர் மாதம் 30ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்பகுதியில் அடித்த ஒக்கி புயலின் போது, கானாமல் போன தமிழக மீனவர்கள் 27 பேர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம் ஏற்கெனவே ரூ. 5 கோடியே 40 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
முன்னதாக, ஒக்கி புயலின்போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான மீனவர்கள் குறித்து அறிக்கை தயாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை படி, 177 மீனவர்கள் காணாமல் போனதாகத் தெரிய வந்தது. இதை அடுத்து அவர்கள் அனைவரும் ஒக்கி புயலின்போது உயிரிழந்து விட்டதாகக் கருதி, அவர்களது குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இந்த நிவாரண உதவியை வழங்கினார்.
முதல் கட்டமாக ஒவ்வொரு மீனவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 10 லட்சம் ரூபாய்க்கான எஸ்பிஐ., வங்கி காசோலை வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.10 லட்சம் அடுத்த 6 மாத கால அவகாசத்தில் பெறப் படும் வகையில் வைப்பு நிதியாக வங்கி கணக்கில் வைக்கப்படும்.



