
கேரளா கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி 20 கோடி சபரிமலை பக்தர்களுக்கு அடித்ததா யோகம். பம்பரில் நீடிக்கும் மர்மம் பலரை வியப்படைய செய்து வருகிறது.
கேரள சேட்டன்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கல் முடிந்த நிலையில் கோட்டயத்தில் டிக்கெட் வாங்கிய நபர் 20 கோடி பரிசை தட்டி தூக்கியுள்ளார்.
கோட்டயம் கஞ்சிரப்பள்ளி பகுதியில் சபரிமலை பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் அவர்களில் யாருக்கேனும் தான் பரிசு கிடைத்து இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசாக ரூ.20 கோடி XC 138455 என்ற எண்ணுக்கு அடித்தது. முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்படும் இந்த லாட்டரி டிக்கெட்டில் வெற்றியாளருக்கு 63 சதவீத தொகை கையில் கிடைக்கும்.
கோட்டயத்தில் விழுந்த ரூ.20 கோடி
அதாவது 20 கோடியில் சுமார் 12 கோடி தான் வெற்றியாளருக்கு கிடைக்கும். மீதமுள்ள தொகை வருமான வரி மற்றும் கமிஷன் தொகையாகவும் பிடித்துக்கொள்ளப்படும். ஏஜெண்ட் கமிஷன் மட்டும் 12 சதவீதம் பிடிக்கப்படுகிறது. இதனால், லாட்டரியை விற்ற ஏஜெண்டிற்கு கிட்டதட்ட ரூ.2 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், லாட்டரியை விற்ற சுதிக் என்ற லாட்டரி ஏஜெண்ட் இன்ப வெள்ளத்தில் உள்ளார்.
அதேநேரத்தில் குலுக்கல் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்ட போதிலும் தற்போது வரை வெற்றியாளரை கண்டுபிடிக்க முடியவில்லை. கோட்டயம் மாவட்டத்தில் காஞ்சிரப்பள்ளி என்ற இடத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்குதான் முதல் பரிசு அடித்துள்ளது. 30 ஆண்டுகளாக லாட்டரி விற்பனை செய்து வரும் சுதிக்கிற்கு விற்ற டிக்கெட்டில் ஓணம் பம்பரில் இரண்டாவது பரிசு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக அடித்தது.
சபரிமலைக்கு வந்த பக்தர்கள்
தற்போது முதல் பரிசு பெற்ற டிக்கெட்டையே விற்பனை செய்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் சுதிக். இந்த ஆண்டு 5 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்கி விற்பனைக்கு வைத்து இருந்தாராம். விற்பனை பிரதிநிதிகளுக்கும் இந்த டிக்கெட்டுகளை அளித்துள்ளார். இதனால் பரிசு விழுந்த தொகையை யார் வாங்கியது என்பதால் சுதிக்கால் யூகிக்க முடியவில்லை.
லாட்டரி விற்பனை தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே டிக்கெட் விற்பனை செய்யப்படு இருக்கலாம் என்று சுதிக் கூறினார். வெற்றியாளர் யார் என்று தனக்கு தனிப்பட்ட முறையில் நியாபகம் இல்லை எனவும் அவர் கூறினார். முதல் பரிசு வென்ற டிக்கெட் விற்பனை செய்யபப்ட்ட இடமான கஞ்சிரப்பள்ளி சபரிமலை பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாகும்.
குலுக்கல் முடிந்து 3 நாட்கள் ஆகியது
இதனால், சபரிமலைக்கு வந்த பக்தர்களில் யாரேனும் திரும்பி செல்லும் போது வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்து இருக்கலாம் என்ற யூகமும் கேரள சேட்டன்கள் மத்தியில் எழுந்துள்ளது. லாட்டரி குலுக்கல் நடைபெற்று இன்றோடு (திங்கள்கிழமை) மூன்றாவது நாள் ஆகிறது.
ஆனால் இதுவரை வெற்றியாளர் தெரியாததால் சேட்டன்கள் தங்கள் லாட்டரியை ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து எண்களை செய்து வருகிறார்களாம். சனிக்கிழமை முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் வங்கியில் சமர்ப்பிக்க ஒருவேளை வெற்றியாளர் திட்டமிட்டு இருந்தால் அவரை கண்டுபிடிக்க வெற்றியாளர் தெரிய மேலும் சில நாட்கள் ஆகும் என்பதே கேரள லாட்டரி பிரியர்களின் கருத்தாக உள்ளது.




