இயக்குனர் கரு.பழனியப்பன் சமீபத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்து ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதில் ரஜினி என்றைக்காவது எளியவர்களுக்கு குரல் கொடுத்துள்ளாரா? எளியவர்களுக்கு உதவி செய்துள்ளரா? அவர் ராஜ்குமாருக்கும் அமிதாப்புக்கும் மட்டுமே குரல் கொடுத்துள்ளதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் 1989ஆம் ஆண்டு நடிகர் கவுண்டமணி கொடுத்த பேட்டி ஒன்றை பதிவு செய்துள்ளார் ரஜினி ரசிகர். அந்த பேட்டி இதுதான்:
ஸ்டூடியோவில் லைட்பாயாக இருக்கும் ஒருவர் கந்துவட்டிக்கு கடன் வாங்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். கடன் கொடுத்தவர் அடிக்கடி ஸ்டூடியோ தளத்திற்க்கு வந்து கொடுத்த கடன் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தார்.
இப்படி கடன் கொடுத்தவர் சத்தம் போட, கடன் வாங்கிய ‘லைட்பாய்’ அவரை சமாளித்தபடி பதில் சொல்லிக் கொண்டிருப்பதை, தூரத்தில் இருந்து கவனித்த ரஜினி, கடன் கொடுத்த கந்துவட்டிக்காரரை அழைத்து அந்த லைட்மேன் எவ்வளவு ரூபாய் கடன் வாங்கினார் என்று கேட்டு வட்டியோடு உடனே பணத்தை தன் மானேஜர் மூலம் வரவழைத்துக் கொடுத்து செட்டில் செய்து, ‘இனிமேல் எந்த ஏழை லைட்மேனை தொந்தரவு செய்ய வேண்டாம்’, என்று கேட்டுக்கொண்டார்.
இந்த விபரத்தை பின்பு அந்த லைட்மேன் அறிந்து ரஜினிக்கு நன்றி சொல்லி இருக்கிறார். ஒரு புன்னகையுடன் ரஜினியும் ஒ.கே என்று கூறி அவரை தட்டிக் கொடுத்திருக்கிறார். இப்படி ஒரு சம்பவம் அல்ல. பல இருக்கின்றன.
எல்லா நிலையிலும் பிறர் அறியாமல் உதவி செய்து வருபவர் ரஜினி என்று நடிகர் கவுண்டமணி அந்த பேட்டியில் கூறியுள்ளார். கரு.பழனியப்பனின் குற்றச்சாட்டுக்கு இந்த பேட்டியே பதிலாக அமைந்துள்ளது.