இணையப் பயன்பாட்டு டேட்டா சேவை வழங்குவதில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய வரவு, தொலைத் தொடர்பு டேட்டா கட்டண விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் வரும் 12 முதல் 18 மாதங்களில் டேட்டா பயன்பாட்டு கட்டணங்கள் 40 சதம் வரை குறையும் என்றும் அகன்ற அலைக்கற்றை மற்றும் நெட்வொர்க் சேவை வழங்கும் யுடிஸ்டார்காம் தெரிவித்துள்ளது. மொபைல், பிராட்பேண்ட், நெட்வொர்க் சொல்யூஷன் வழங்கும் எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல், ரிலையன்ஸ், எஸ் எஸ் டி எல் உள்ளிட்ட நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் தன் சேவைகளை விரிவுபடுத்தவுள்ளது. இந்தியாவில் அகன்ற அலைவரிசை வழங்குவதில் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியில் கட்டணம் குறையும் என்று கூறியுள்ள இந்நிறுவனத்துக்கு இந்தியாதான் வருவாய் ஈட்டித் தரும் இரண்டாவது பெரிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

