சென்னை:
அதிமுக எம்.எல்.ஏ க்கள் சட்டசபையில் என் புடவையைப் பிடித்திழுத்தார்கள் என விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ க்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி இடையே நேற்று சட்டப் பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வெளியே வந்த விஜயதரணி., அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா காவல்துறை மானியத்தைப் பற்றி பேசிய பிறகு, தனக்கு பேச வாய்ப்பு அளிக்கும்படி அவைத்தலைவரிடம் கேட்டேன். ஆனால் வாய்ப்பு தரவில்லை என்று கூறினார் விஜயதரணி.
மேலும், சில வாரங்களுக்கு முன்பு சட்டப் பேரவை நுழைவு வாயிலில், மறியலில் ஈடுபட்டபோது என்னைத் தாக்கினார்கள். அந்த மறியல் போராட்டத்தில் தாக்குதல் எதுவும் நடக்காதது போல் முதல்வர் ஜெயலலிதா அறிக்கையை படித்தார். இதற்காக நான் எழுந்து கேட்ட போது, எனக்கு பேச வாய்ப்பு தரவில்லை. அப்பொழுது அதிமுக எம்.எல்.ஏ க்கள் என்னை கேலியும், கிண்டலுமாக பேசினர். மேலும், அடிக்க வருவது போல செயல்பட்டனர். என்னைப் பார்த்து அசிங்கம், அசிங்கமான வார்த்தைகளால் பேசினார்கள்.
மேலும், பெண் எம்.எல்.ஏ க்கள் என் புடவையைப் பிடித்து இழுத்தார்கள். எதிர்க்கட்சி பெண் எம்.எல்.ஏ க்களுக்கு சட்டசபையில் கொஞ்சம் கூட பாதுகாப்பு இல்லை. இதை மிகப் பெரிய இழுக்காகவே நான் கருதுகிறேன் – என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.


