ஐக்கிய நாடுகள் சபையின் 70-வது பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர் மோடி, ஜோர்டான் நாட்டு மன்னர் அப்துல்லாவை சந்தித்து இந்தியா-ஜோர்டான் இடையிலான பரஸ்பர உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட மன்னர் அப்துல்லா அளித்துவரும் அளப்பரிய பங்களிப்புக்கு பாராட்டு தெரிவித்த மோடி, ஈராக் மற்றும் சிரியாவில் சிக்கித்தவித்த இந்தியர்களை பத்திரமாக தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் ஜோர்டான் அரசு செய்த உதவிக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
சர்வதேச சமுதாயத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் திகழும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தொல்லையை ஒழித்துக்கட்ட உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும் என மோடி குறிப்பிட்டார்.
சர்வதேச சமுதாயத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை மதத்தோடு இணைத்துப் பார்க்காமல், இதுபோன்ற அமைப்புகளை மதத்தில் இருந்து துண்டித்து, தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இளைஞர்களை மதவாதிகளாக மாற்றுவது மற்றும் தீவிரவாதம் தொடர்பான தகவல்களை பரப்புவது போன்றவற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரதமர் மோடியும், மன்னர் அப்துல்லாவும் இந்த ஆலோசனையின்போது விவாதித்தனர்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க ஜோர்டான் ஆதரவு அளிக்க வேண்டும் என மன்னர் அப்துல்லாவிடம் மோடி கேட்டுக் கொண்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு எப்போதுமே ஜோர்டான் முழுமையான ஆதரவு தெரிவித்து வந்துள்ளதாகவும், இந்த ஆதரவு என்றும் தொடரும் என்றும் மன்னர் அப்துல்லா வாக்குறுதி அளித்துள்ளார்.


