சென்னை:
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரான தமிழருவி மணியன் இன்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசு திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
மதுவிலக்கைப் படிப்படியாகக் கொண்டு வரும் நோக்கமும் இந்த அரசுக்கு இல்லை என்று புரிந்துவிட்டது. மக்கள் நலன் சார்ந்த சிந்தனைக்கும் நம் மாநில அரசுக்கும் எள்ளளவும் சம்மந்தமில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிவிட்டது. மக்களின் ஆர்ப்பாட்டங்களும், அழுகைக் குரல்களும், மதுவால் நிகழும் மரணங்களும் அ.தி.மு.க. அரசின் மனச்சான்றைத் தட்டி எழுப்ப முடியவில்லை.
கண்களையும் காதுகளையும் வேண்டுமென்றெ மூடிக்கொண்டு தவறான பாதையில் தொடர்ந்து நடைபோடும் இந்த அரசை ஆட்சிப்பீடத்தில் இருந்து அகற்றும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த ஆட்சியை வீழ்த்தி விட்டு, ஆர்வத்துடன் காத்திருக்கும் தி.மு.க.வை அரியாசனத்தில் அமர்த்தினால் ஒரு தீமையைத் தவிர்ப்பதற்கு இன்னொரு தீமையை அரவணைத்துக் கொண்ட மன்னிக்க முடியாத தவறாகவே அது முடியும்.
மதுவைக் கொண்டு வந்தது தி.மு.க. மது வருவாயை மட்டுமே பெரிதாக நம்பி அரசை நடத்துவது அ.தி.மு.க.
இந்த இரு கட்சிகளையும் ஆட்சிப் பீடத்தில் இனி அமராமல் பார்த்துக் கொள்வதே மதுவிலக்கை நாடுபவர்களின் முதற்கடமையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எல்லா எதிர்க்கட்சிகளும் வலிமையாகக் குரல் கொடுக்கின்றன. மதுவால் தமிழகத்தைப் பாழ்படுத்திய இரு திராவிடக் கட்சிகளையும், தமிழினத்தை ஈழத்தில் அழிப்பதற்குத் துணை நின்ற காங்கிரஸையும், இந்துத்துவத்தை வெளிப்படையாக வேகப்படுத்தும் பா.ஜ.க.வையும் முற்றாகத் தவிர்த்துவிட்டு தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா., ம.ம.க., இடது சாரிகள், தலித் அமைப்புகள் ஆகிய கட்சிகள்
ஒன்றினைந்து வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வலிமையான கூட்டணி அமைத்து களம் கண்டால், மக்கள் நலன் காக்க முனையும் இந்தக் கூட்டணியின் பக்கம் வாக்காளர்கள் தங்கள் பார்வையை நிச்சயம் திருப்புவார்கள். தேர்தல் முடிவு இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக அமையும். தமிழகத்தில் புதிதாய் ஒரு கூட்டணி ஆட்சி மலரும். இந்தச் சமூகக் கடமையைச் செய்வதற்கு இக்கட்சிகள் அனைத்தும் முடிவெடுத்தால் உண்மையான மதுவற்ற மாநிலத்தை உருவாக்க இவை பூரணமாக பாடுபடுவதாய் நம்பலாம். இவை அனைத்தும் ஓர் அணியில் ஒன்று பட்டு களம் அமைக்க காந்திய மக்கள் இயக்கம் எல்லா வகையிலும் தன் பங்களிப்பைத் தரத் தயாராக இருக்கிறது.
இதைச் செய்வதற்குத் தவறினால் மதுவிலக்குக்குக் குரல் கொடுக்கும் இந்தக் கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக நின்று அ.தி.மு.க.,வே மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிடும். இக்கட்சிகள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பொய்மையாளர்களின் புகலிடங்கள் என்றும், இவை முன் வைக்கும் தி.மு.க., அ.தி.மு.க., எதிர்ப்புக் கோஷங்கள் அனைத்தும் போலித்தனமானவை என்றும் மாற்று அரசியலை நாடும் வாக்காளர்களால் பொருள் கொள்ளப்படும்.


