மாலி:
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் பயணித்த படகில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் ஹஜ் புனித பயணத்தை மேற்கொண்டு விட்டு மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன், தனது மனைவி பாதிமாத் இப்ராகிம்முடன் திரும்பினார். அவர் கடலில் ஸ்பீடு படகில் வந்தபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இதில் அப்துல்லா யாமீன் மற்றும் அவருடைய மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் காயம் இல்லாமல் உயிர் தப்பினார் என்றும் அவருடைய மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் படகில் குண்டு வெடித்ததற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரியவரவில்லை.
தில்லியில் உள்ள இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர் அகமத் முகமது இது குறித்துத் தெரிவித்த போது, “அதிபர் அப்துல்லா யாமீன், அவருடைய மனைவியுடன் மாலி விமான நிலையத்தில் இருந்து சென்றபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதிபருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவருடைய மனைவி காயம் அடைந்துள்ளார். அவர் மாலியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.” என்று கூறினார்.
இதை அடுத்து அதிபர் மற்றும் அவருடன் வந்தவர்கள் போலீஸ் இயந்திரப் படகுக்கு மாற்றப்பட்டு மாலிக்கு அழைத்து வரப்பட்டனர்.


